Published : 19 Jun 2021 11:46 AM
Last Updated : 19 Jun 2021 11:46 AM

ஊரடங்கு நீட்டிப்பு?- மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனையைத் தொடங்கினார். தொடர்ந்து அரசு உயர் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். இதில் மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த நிலையில் ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஜனவரி, பிப்ரவரி மார்ச் மாதத்தில் இயல்பு வாழ்க்கை சாதாரணமாகச் சென்றது, தடுப்பூசிகள் போடப்படாத நிலையில் அலட்சியமாக இருந்தால் இரண்டாம் அலை பரவல் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் அறிவித்தனர்.

நிபுணர்கள் அறிவித்தபடி இரண்டாம் அலை பரவல் விரைவாக வந்தது. மார்ச் மாத இறுதியில் இந்தியாவில் ஆரம்பித்த இரண்டாம் அலை பரவல், ஏப்ரல் மாதத்தில் அதிகரித்து, மே மாதத்தில் உச்சம் தொட்டது. தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. ஒரு நாளைக்கு 36,000 தொற்று எண்ணிக்கை என உச்சம் தொட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டது. பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க நிவாரண நிதி, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்தது. பொதுமக்கள் பாதிக்கப்படுவது குறைந்ததால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

நேற்று தமிழகத்தில் மொத்த பாதிப்பு 10,000-க்கும் கீழே 8,633 என்கிற எண்ணிக்கையிலும், சென்னை பாதிப்பு 500-க்கும் கீழே 492 என்கிற எண்ணிக்கையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 89,009 ஆகக் குறைந்துள்ளது. தினசரி குணமடைவோர் எண்ணிக்கையும் 19,860 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோன்ற முன்னேற்றங்களை அடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களுக்கு ஒருமுறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவிக்கிறார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அமலான ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

முதல் கட்டமாக மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை தொடங்கியுள்ளது. அடுத்து தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர், காவல்துறை தலைமை அதிகாரி, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவார்.

இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் கோவையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஆயிரத்துக்குக் கீழ் தொற்று வேகமாகக் குறைந்துள்ளது. 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? தளர்வுகளை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்தலாமா?, பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குதல், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குதல், மேலும் மற்ற தொழில்களுக்கு தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x