Published : 19 Jun 2021 03:12 AM
Last Updated : 19 Jun 2021 03:12 AM

அமெரிக்க பல்கலை.தலைவராக நியமிக்கப்பட்ட ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை

அமெரிக்காவில் உள்ள மிகப் பழமையான இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழர் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழரான ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும் உலகப் புகழ்பெற்றதுமான இந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால் தமிழர்களுக்கும், தமிழகத்துக்கும் மட்டுமின்றி இந்திய துணை கண்டத்துக்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத் தந்துள்ளார்.

தற்போது 53 வயதாகும் ராஜகோபால், திருவாரூரில் பிறந்தவர்.சென்னையில் பள்ளி, கல்லூரி படிப்பையும் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியான கிண்டிபொறியியல் கல்லூரியில் மேற்படிப்பையும் பயின்றவர். ஆகஸ்ட் 16-ம் தேதி இலினொய் தொழில்நுட்ப பல்கலைக்கழக தலைவராக பொறுப்பேற்க இருக்கும் ராஜகோபால், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடியுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்திருப்பது பிறந்த மண் மீது அவர் கொண்டுள்ள பற்றுதலைக் காட்டுகிறது.

தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்துக்கு சான்றாக விளங்கும் ராஜகோபால் ஈச்சம்பாடிக்கு தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துகளை பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x