

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.98 ஆக அதிகரித்துள்ளது. கடலூர், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக உதகையிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
5 மாநில சட்டப்பேரவைதேர்தல் முடிவடைந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இதன்படி, நேற்று பெட்ரோல்விலை 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.98.14, டீசல் விலை 27 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.92.31 என விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே, கடலூர், கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக உதகையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.18-க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.