

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காலத்தில் கிராமப்புறஏழை, எளிய மக்கள் வேலைவாய்ப்பு இன்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் 55 வயது மேற்பட்டவர்களுக்கு வேலை தரக் கூடாது என்று தமிழகஅரசின் உத்தரவு இத்திட்டத்தில் பணிபுரியக்கூடிய 55 வயதுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராமப்புறத்தொழிலாளர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் உருவாக்கியுள்ளது.
கரோனா காலத்தில் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிபுரிய வேண்டும் என்று தமிழகஅரசு கருதினால் அது ஏற்புடையதே. ஆனால் நல்ல உடல் பலம்உள்ளவர்கள், 55 வயதை கடந்து இருந்தால் அவர்களுக்கு பணி தரக் கூடாது என்ற உத்தரவு ஏழை,எளிய மக்களுக்கு பெரும் சிரமத்தை தான் ஏற்படுத்தும். எனவே, 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தரக் கூடாது என்ற அரசின் உத்தரவை உடனடியாக திரும்ப பெற்று அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 50 நாட்களுக்கு மட்டுமே தற்போது வேலை வழங்கப்படுகிறது. இனி ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேரூர், நகர்ப்புற ஏழை, எளிய மக்களுக்குபயன்தரக் கூடிய வகையில் இத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.