Published : 25 Jun 2014 10:58 AM
Last Updated : 25 Jun 2014 10:58 AM

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாக அமலாக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்’ என, மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் செவ்வாய்க் கிழமை அவர் அளித்த பேட்டி:

ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு ரயில் கட்டணத்தை பா.ஜ.க. அரசு உயர்த்தியுள்ளது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு விரோதமானது.

ஏற்கெனவே உணவு பணவீக்கம் அதிகரித்து உள்ள நிலையில், ரயில் சரக்கு கட்டணம் உயர்வு காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் புதன்கிழமை நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிக்கிறது.

சமையல் எரிவாயு விலை மாதம்தோறும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை இறக்குமதிக்கு கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்றுமதியை ஊக்கப்படுத்த வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்க்கரை விலை உயரும்.

வருவாய் இழப்பு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதற்கு விரோதமாக செயல்படுகிறார்கள். இந்த விஷயத்தில் காங்கிரஸ் அரசு செய்ததைத்தான் பா.ஜ.க. அரசும் செய்கிறது.

கடந்த ஆண்டில் வரிச் சலுகைகள் மூலம் ரூ.5.73 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். மேலும், ரூ. 5 லட்சத்து 100 கோடி வரி வசூலிக்க முடியாமல் உள்ளது. மொத்தத்தில் ரூ.10.73 லட்சம் கோடி அளவுக்கு வரி வசூலிக்க வேண்டியுள்ளது. இதனை முறையாக வசூலித்தாலே ரயில் கட்டண உயர்வை தவிர்க்கலாம். மற்ற பொருள்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்தலாம்.

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரத்தில், சுமார் 900 ஏக்கர் விவசாயிகளின் நிலங்களை தனியார் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்று வருகின்றனர். இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. இந்தப் பிரச்சினை காரணமாக, மார்க்சிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டது.

மேலும், கோவில்பட்டியில் ஹாக்கி மைதானம் பிரச்சினை தொடர்பாக நகரச் செயலர் சீனிவாசன் வீடு மீதும் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த இரு சம்பவங்களில் தொடர்புடைய சமூக விரோதிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

பா.ம.க. வழக்கு

கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் ராதாகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவர், தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் இந்தக் கொலை நடந்திருப்பதாக அறிகிறோம். இது வன்கொடுமையின் வெளிப்பாடு.

இந்தச் சூழ்நிலையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என பா.ம.க. வழக்கறிஞர் பாலு, நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ம.க-வின் வழக்கை எதிர்க்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளன. இந்தச் சட்டத்தை முழுமையாக அமல் படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது நிலை.

குடிநீர்ப் பிரச்சினை

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதமாக முதியோர் உதவித் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், மாநிலம் முழுவதும் குடிநீர்ப் பிரச்சினை உள்ளது. இந்தப் பிரச்சினைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும் என்றார் அவர்.

மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்ட செயலர் கே.எஸ்.அர்ச்சுணன் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x