Published : 18 Jun 2021 09:53 PM
Last Updated : 18 Jun 2021 09:53 PM
கரோனா மளிகை தொகுப்பு வராததால் மதுரை அரசு ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்குவதையும் நிறுத்தி வைத்துள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 14 வகை கரோனா மளிகை தொகுப்பு மற்றும் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி ரேஷன் கடை ஊழியர்கள் இந்த நிவாரணத் தொகை மற்றும் பொருட்களை முறையாக வழங்கி வந்தனர்.
தற்போது மதுரை மாவட்டத்திற்கு வர வேண்டிய 14 வகை மளிகை தொகுதிப்பு போதுமான அளவு இன்னும் வரவில்லை. அதனால், ரேஷன் கடைகளில் இன்று முதல் தற்காலிகமாக மளிகை தொகுப்பும் மற்றும் நிவாரணத்தொகை வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். அதனால், பொதுமக்கள் வந்து ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், ‘‘ரேஷன்கார்டுகளுக்கு வழங்க வேண்டிய பணம் வந்துவிட்டது. ஆனால் மளிகை தொகுப்பு குடோன்களுக்கே இன்னும் வரவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை வந்துவிட்டது. மளிகை தொகுதி கையிருப்பு உள்ள சில கடைகளில் மட்டுமே இன்று(நேற்று) பணமும், பொருளும் வழங்கப்பட்டது. மளிகை தொகுப்பு வராவிட்டாலும், கையில் இருக்கும் ரூ.2 பணத்தையாவது பொதுமக்களுக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் அனுமதித்து இருக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகள் இரண்டையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும், மளிகை தொகுப்பு வரும் வரை காத்திருங்கள், அதுவரை பணத்தை வழங்க வேண்டாம் என்று வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளனர். அதிகாரிகளை மீறி நாங்கள் வழங்க இயலாது.
இரண்டு நிவாரணத்திற்கும் தனித்தனி பில்தான் போட வேண்டும். அதனால், பணத்தை தனியாக வழங்குவதால் எந்த பிரச்சனையும் இல்லை. இது தெரியாமல் பொதுமக்கள், ரேஷன் கடை ஊழியர்களிடம் வந்து வாக்குவாதம் செய்தனர்.
அவர்கள், ‘கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து கஷ்டப்படும் இந்த நேரத்தில் பணத்தை வழங்கினால்தான் எங்களுக்கு அது உதவியாக இருக்கும். நாங்கள் கடன் வாங்கி செலவு செய்தபிறகு வழங்கி என்ன பயன், ’ என்று கூறுகிறார்கள்.
அவர்கள் சொல்வதும் நியாயம்தான். அரசு, நிவாரணத்தொகை வழங்குவதை நிறுத்தி வைக்கச் சொல்லவில்லை. ஆனால், அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடுகின்றனர், ’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT