Published : 18 Jun 2021 07:10 PM
Last Updated : 18 Jun 2021 07:10 PM

போலீஸாருடன் மோதலால் வழக்குப் பதிவு: பெண் வழக்கறிஞர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

தவறு செய்யும் வழக்கறிஞர்கள் குறித்து புகார் வரும் வரை காத்திருக்காமல், தானாக முன்வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், சட்டக்கல்வி பயிலும் அவரது மகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கடந்த வாரம் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த நேரத்தில், சென்னை, சேத்துப்பட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமைக் காவலரான ரஜித் குமார் உள்ளிட்ட காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை வழிமறித்து விசாரணை செய்தனர். காரை ஓட்டிவந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனிடமிருந்து ஓட்டுநர் உரிமத்தைப் பெற்று அபராத ரசீதைக் கொடுத்துள்ளனர். இதனால் அந்தப் பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது. ரசீதை வீசி எறிந்து இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து தலைமைக் காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். கொலை மிரட்டல் விடுவது, அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவையும் சேர்த்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தாய் மகள் இருவரும் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஊரடங்கு விதிகளை மீறும் வழக்கறிஞர்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் காவல் துறையில் உள்ள முன்களப் பணியாளர்கள், உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருவதாகவும், பொதுமக்கள் அனைவரும் கரோனா பயத்தில் ஊரடங்கைக் கடைப்பிடிக்கும்போது, வழக்கறிஞர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் தனுஜாவிற்கு முன்ஜாமீன் அளித்தால் அரசு மருத்துவமனைக்கு நிவாரண நிதியாக ஒரு லட்ச ரூபாய் தர முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலைப் பிரதிவாதியாகச் சேர்க்க உத்தரவிட்ட நீதிபதி, ஊரடங்கில் வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, புகார்கள் வரும் வரை காத்திருக்காமல் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென என பார் கவுன்சிலுக்கு நீதிபதி அறிவுறுத்தினார். இது தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறினார்.

மேலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றிவிடும் என்று மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்தார். வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்றும், வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் ஜூன் 18-ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று உத்தரவிட்ட நீதிபதி தண்டபாணி, வழக்கறிஞர் தனுஜாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சட்டக்கல்வி பயிலும் அவரது மகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தனுஜா முன்ஜாமீன் வழக்குத் தொடர்பாக வாட்ஸ் அப்பில் அவதூறாகக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து, அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் மீது புகார்களோ, காவல்துறை அறிக்கையோ வரும்வரை காத்திருக்காமல் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளைக் கொண்டு வரவேண்டும் என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x