Last Updated : 18 Jun, 2021 06:31 PM

 

Published : 18 Jun 2021 06:31 PM
Last Updated : 18 Jun 2021 06:31 PM

பாலியல் வழக்கு; முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மதுரை வீட்டில் தனிப்படை ஆய்வு: மனைவியிடம் 1 மணி நேரம் விசாரணை

நடிகையிடம் குடும்பம் நடத்தி ஏமாற்றிய வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், மதுரையிலுள்ள அவரது வீட்டில் தனிப்படை போலீஸார் இன்று ஆய்வு செய்தனர். அவரது மனைவியிடம் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக அவரைப் பற்றி விசாரித்தனர்.

ராமநாதபுரம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக 2016ல் தேர்வானவர் மருத்துவர் மணிகண்டன்.

அதிமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். இடையில், அவர் மீதான சில புகார் காரணமாக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். மீண்டும் அதிமுக சார்பில், அவர் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என, எதிர்பார்த்த நிலையில், அவருக்கு அதிமுக தலைமை வாய்ப்பளிக்கவில்லை.

இந்நிலையில் அவர் அமைச்சராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்வதாகக் கூறி 2 ஆண்டுகளுக்கு மேல் குடும்பம் நடத்தி, 3 முறை கட்டாயக் கருக் கலைப்பு செய்து ஏமாற்றியதாக மலேசியாவைச் சேர்ந்த சினிமா நடிகை சாந்தினி புகார் அளித்தார். அதன் பேரில், அமைச்சர் மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தொடர்ந்து தலைமறைவான மணிகண்டனை தேடுகின்றனர்.

இதற்கிடையில், மதுரை அண்ணாநகர் பகுதியிலுள்ள மணிகண்டனுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனை, வீடுகளில் அவர் பதுங்கியிருக்கலாம் என, சந்தேகிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து காவல் ஆய்வாளர் ஒருவர் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் நேற்று காலை மதுரை வந்தனர். அவர்கள் அண்ணாநகர் உழவர்சந்தை பகுதியிலுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்து அவரது மனைவி மல்லிகாவின் ஓட்டுநர் ராஜாவிடம் விசாரித்தனர்.

பின்னர் வீட்டுக்குள் நுழைந்த தனிப் படையினர் அனைத்து அறைகளிலும் சோதனை யிட்டனர். அவர் அங்கில்லை என, தெரியவந்தது. இருப்பினும், வீட்டில் இருந்த அவரது மனைவியும், அரசு மருத்துவருமான மல்லிகாவிடம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக விசாரித்தனர். இதைத்தொடர்ந்து அண்ணாநகர் மெயின்ரோட்டில் அவரது மனைவி நடத்தும் மருத்துவமனையிலும், அதே பகுதியிலுள்ள மற்றொரு வீட்டிலும் சோதனை நடத்தியதாகவும், மேலும் ஓரிரு நாள் மதுரையில் முகாமிட்டு அவரைத் தேடும் பணியில் ஈடுபட்ட இருப்பதாகவும் தனிப்படையினர் தெரிவித்தனர். இதனிடையே ராமநாதபுரத்திற்கும் 4 பேர் கொண்ட தனிப்படையினர் சென்றுள்ளனர்.

அவர்கள் வண்டிக்காரத் தெருவிலுள்ள அவரது வீட்டில் ஆய்வு செய்துள்ளனர். தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள முன்னாள் அமைச்சரின் தந்தைக்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்றிலும் சோதனை மேற் கொண்டதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x