Published : 18 Jun 2021 02:15 PM
Last Updated : 18 Jun 2021 02:15 PM

ஊரடங்கு நீட்டிப்பு?- மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 21ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இதில் மேலும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. முதல் அலை ஓய்ந்த நிலையில் ஊரடங்கில் ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு தொடக்கத்தில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். ஆனாலும், இரண்டாம் அலை பரவல் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் அறிவித்தனர்.

ஆனால், தொடர் அலட்சியம், தேர்தல் பரப்புரை காரணமாக மக்கள் ஒன்றுகூடல் என கரோனா இரண்டாம் அலை பரவல் விரைவாக வந்தது. மார்ச் மாத இறுதியில் ஆரம்பித்த இரண்டாம் அலை பரவல், ஏப்ரல் மாதத்தில் அதிகரித்து, மே மாதத்தில் உச்சம் தொட்டது. ஒரு நாளைக்கு 36,000 தொற்று எண்ணிக்கை என உச்சம் தொட்டது.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஊரடங்கை அமல்படுத்தி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் அரசு எந்திரத்தை முடுக்கிவிட்டது. பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க நிவாரண நிதி, உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.இதனால் கரோனா பரவல் வெகுவாகக் குறைந்தது.

நேற்று தமிழகத்தில் மொத்த பாதிப்பு 10,000-க்கும் கீழே 9,115 என்கிற எண்ணிக்கையிலும், சென்னை பாதிப்பு 551 என்கிற எண்ணிக்கையிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற முன்னேற்றங்களை அடுத்து ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 7 நாட்களுக்கு ஒருமுறை ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் தளர்வுகள், கட்டுப்பாடுகளை அறிவிக்கிறார்.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அமலான ஊரடங்கு வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் தமிழ்நாட்டில் கோவையைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று வேகமாகக் குறைந்துள்ளது. 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கலாமா? தளர்வுகளை மாநிலம் முழுவதும் ஒரே மாதிரி அமல்படுத்தலாமா?, பொதுப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குதல், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்குதல், மேலும் மற்ற தொழில்களுக்கு தளர்வுகள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை இடம்பெறும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x