Published : 18 Jun 2021 02:02 PM
Last Updated : 18 Jun 2021 02:02 PM

வெப்பச் சலனம்; சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாகத் தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்பச் சலனத்தின் காரணமாக

ஜூன் 19, ஜூன் 20 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, சென்னை, புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 21, ஜூன் 22 ஆகிய தேதிகளில் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவு (செ.மீ.)

மேல் பவானி (நீலகிரி) 22, அவலாஞ்சி (நீலகிரி) 13, சின்னகல்லாறு (கோவை), நீலகிரி தலா 6, வால்பாறை (கோவை) 5, சோலையாறு (கோவை), கூடலூர் (பஜார்) நீலகிரி தலா 4, பெரியாறு (தேனி) 3, பாபநாசம் (திருநெல்வேலி) 2, உதகமண்டலம் 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்

ஜூன் 18, ஜூன் 19 ஆகிய தேதிகளில் ஆந்திரக் கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதி

ஜூன் 18, ஜூன் 19 ஆகிய தேதிகளில் கேரளா, கர்நாடகப் பகுதிகள், லட்சத் தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்''.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x