நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கரோனா நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு நிவாரணமாகத் தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவியாக 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இந்த நிவாரண உதவி வழங்க உத்தரவிட வேண்டும் என, மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் இன்று (ஜூன் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், தமிழகத்தில் மொத்தமுள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், குடும்ப அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 8,493 பேருக்கும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதால், உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், உதவித்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்க ஏதுவாக வழக்கின் விசாரணையை நீதிபதிகள், மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in