Last Updated : 18 Jun, 2021 09:09 AM

 

Published : 18 Jun 2021 09:09 AM
Last Updated : 18 Jun 2021 09:09 AM

தமிழகத்தில் வனப் பரப்பளவை  33 சதவீதமாக அதிகரிக்கக் கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை

தமிழகத்தில் வனப்பரப்பளவை 22 சதவீதமாக இருந்து 33 சதவீதமாக உயர்த்தக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை சேந்தன்குடியைச் சேர்ந்த த.கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப்பகுதியாகும். இதில் சமவெளி காடுகளில் பெரும் பகுதி வனத்துறையிடம் இருந்து வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. அந்த இடங்களில் இயற்கை காடுகள் அழிக்கப்பட்டு தைல மரங்களை வனத் தோட்டக் கழகம் வளர்த்து வருகிறது. தற்போது 22 சதவீத வனப்பரப்பு மட்டுமே உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் எக்டேர் பரப்பளவுள்ள சமவெளி காடுகளின் பெரும்பகுதி வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டது. அந்த இடங்களில் தைல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. தைல மரங்கள் பெரும்பாலும் காகிதக்கூழ் தயாரிக்கவும், தொழிற்சாலைகளில் நீராவி கலன்களுக்கும் மட்டுமே பயன்படுகிறது.

கிராம ஊராட்சிகளில் காலியிடங்களில் இயற்கை காடுகளை உருவாக்கவும், இப்பணியில் நூறு நாள் வேலை திட்டப் பணியாளர்களை பயன்படுத்தவும் ஊராட்சி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் அரசு அலுவலக வளாகங்களில் குறுங்காடுகளை உருவாக்கவும், தமிழக அரசு 1997-ல் பிறப்பித்த அரசாணை படி ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம வனக்குழுவை ஏற்படுத்தி நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை பயன்படுத்தி வனப்பகுதியின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார். தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x