கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

கூட்டுறவு சங்கங்கள் கலைப்பு விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுக்களை கலைக்க தடை விதிக்கக் கோரிய வழக்கில், தற்போதைய நிலை தொடர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அன்பில் கூட்டுறவு சங்கத் தலைவர் அருண் நேரு உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வுக்கு வந்தபோது, தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகக் குழுக்களை கலைத்து புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு விரைவில் முடிவெடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

2023 வரை பதவிக்காலம்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் 2018-ல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக் குழுக்களின் பதவிக் காலம் 2023 வரை உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் தன்னாட்சி அமைப்பு. தனி சட்டம், விதிகள் உள்ளன. எனவே கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக் குழுக்களை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த தடை விதித்தும், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பணி செய்ய இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இது குறித்து கூட்டுறவுத் துறை செயலர் பதிலளிக்க வேண்டும். அதுவரை கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in