Published : 18 Jun 2021 03:15 AM
Last Updated : 18 Jun 2021 03:15 AM

சென்னையில் நிலத்தடி நீர், காற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துள்ளதா?- ஆய்வு செய்ய குழு அமைத்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை மாநகரப் பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வல்லுநர்கள் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அவை அதிக அளவில் குப்பையாக, குப்பை கொட்டும் வளாகங்களுக்கும், சாலையோரப் பகுதிகளுக்கும் செல்கிறது. இதனால் மாநகரப் பகுதியில் சுவாசிக்கப்படும் காற்றில் நுண் பிளாஸ்டிக் மாசு கலந்திருப்பதாகவும், அதனால் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்தது. இது தொடர்பாக மத்திய மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் பதில் அளிக்க வேண்டும் என அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த 16-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போது தேசிய சுற்றுப்புற காற்றுத் தர கண்காணிப்பு முறை மூலமாக காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்த மாசுவை அளவிடும் முறை இல்லை. இந்த கண்காணிப்பு முறையை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது பிளாஸ்டிக் நுண்துகள் மாசுவை அளவிடும் முறையை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தற்போது அமலில் உள்ள காற்று தர கண்காணிப்பு முறை, கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 2021-ம் ஆண்டு. இந்த காலகட்டத்தில் பல்வேறு வகையான மாசுக்கள் ஏற்பட்டுள்ளன. அதற்கு ஏற்றவாறு தேசிய காற்றுத் தர கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும். அண்மையில் வெளிவந்த நாளிதழில், சென்னை மாநகராட்சி குப்பை கொட்டும் வளாகம் அருகில் உள்ள நிலத்தடி நீரிலும் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பகுதியில் காற்று மற்றும் நீரில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்திருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானிகள், அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மைய விஞ்ஞானி ஆகியோர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்படுகிறது.

இக்குழு பெருங்குடி குப்பை கொட்டும் வளாகம் அருகில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்தும், அப்பகுதி மற்றும் மாநகரின் பிற பகுதிகளில் காற்றின் தரத்தை கண்காணித்தும், அவற்றில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இந்த வழக்கு ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x