Last Updated : 17 Jun, 2021 06:13 PM

 

Published : 17 Jun 2021 06:13 PM
Last Updated : 17 Jun 2021 06:13 PM

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய குழு அமைக்கக்கோரி வழக்கு

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கக்கோரிய வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலா, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பணியிடங்களில் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை விசாரிக்க உள் புகார் குழு மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டும்.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய போது இந்தியாவில் 655 மாவட்டங்களில் 29 சதவீத மாவட்டங்களில் மட்டுமே உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. 15 சதவீத மாவட்டங்களில் குழு இல்லை. 56 சதவீத மாவட்டங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அக்குழுக்கள் செயல்பாடு இல்லாமல் உள்ளது. எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை மதிப்பீடு செய்ய நிபுணர் குழு அமைக்கவும், உள் புகார் குழு மற்றும் உள்ளூர் புகார் குழுக்களை மாநில அளவில் தணிக்கை செய்யவும், குழு உறுப்பினர்களின் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை இணையதளத்தில் வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், தற்போதைய சூழலில் இது முக்கிய வழக்கு. பொதுநல நோக்கத்தில் மனு தாக்கல் செய்துள்ள மனுதாரரை பாராட்டுகிறோம்.

மனுதாரர் மேலும் ஆய்வு செய்து கூடுதல் தகவல்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x