Published : 17 Jun 2021 05:38 PM
Last Updated : 17 Jun 2021 05:38 PM

டெல்லியில் கைதான சிவசங்கர் பாபா: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர், சிறையிலடைப்பு

சென்னை

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாகி நேற்று டெல்லியில் பிடிபட்ட அவரை சிபிசிஐடி போலீஸார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

1990-களில் பிரபலமானவர் சிவசங்கர் பாபா. நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிவந்த இவர், பக்தர் ஒருவர் கொடுத்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி என்கிற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிக்கியதை அடுத்து மேலும் பல பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கத் தொடங்கினர். இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இது தவிர தடகளப் பயிற்சியாளர் நாகராஜ், ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் உள்ளிட்டோரும் பாலியல் புகாரில் சிக்கி கைதாகினர்.

இதேபோன்ற புகார் சிவசங்கர் பாபா மீதும் புகார் எழுந்தது. மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பியது. பள்ளி நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரின் வழக்கறிஞர் நாகராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 11ஆம் தேதி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சம்மன் அனுப்பப்பட்டவர்கள் ஆஜராகினர். இதில் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஜானகி என்பவர் ஆஜரானார்.

சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாக ஜானகி, ஆவணங்களைத் தாக்கல் செய்தார். இந்நிலையில் 7 வெவ்வேறு புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் ஐபிசி 354-(பெண்களிடம் குற்றம் செய்யும் நோக்குடன் தாக்குதல், பலப்பிரயோகம் செய்தல்), 363- (ஆட் கடத்தல்), 365-( ரகசியமாக அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்துவது), 366 ( கட்டாயப்படுத்தி திருமண உறவு கொள்வதற்காகக் கடத்துவது), Sec.4 of TNPHW Act (பெண் வன்கொடுமைச் சட்டம்) Sec.8, 10, 12 & 17 of POCSO Act (குழந்தைகளிடம் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

வழக்கு பல மாநிலங்கள் சம்பந்தப்பட்டதால், பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் வழக்கு வேகமெடுக்கத் தொடங்கியது. போக்சோ சட்டத்துக்கு முன்ஜாமீன் கிடைக்காது என்பதால் சிவசங்கர் பாபா நேபாளம் தப்பிச் செல்லக்கூடும் என்பதால் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்ய லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சிவசங்கர் பாபாவைத் தேடி சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படை டேராடூன் விரைந்தது.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் டெல்லிக்குத் தப்பி ஓடியது தெரியவந்தது. டெல்லி சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சிவசங்கர் பாபாவின் இருப்பிடத்தைக் கண்டறிந்து அவரைப் பிடிக்கும் பணியில் போலீஸார் இறங்கினர். இதில் டெல்லி காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருந்தது தெரிந்து அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அடையாளம் தெரியாமல் இருக்க அவர் மொட்டை அடித்திருந்தார்.

உடனடியாக டிரான்சிட் வாரண்ட் போட்டு அவரை விமானம் மூலம் நள்ளிரவு 1 மணிக்கு சென்னை அழைத்து வந்தனர். நேராக எழும்பூர் சிபிசிஐடி தலைமை அலுவலகம் அழைத்துச் சென்ற போலீஸார் விடிய விடிய அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் காலையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபின் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் மாலை 4.30 மணிக்கு ஆஜர்படுத்தினர். நீதிமன்ற நடுவர் உத்தரவுப்படி அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x