Published : 17 Jun 2021 04:33 PM
Last Updated : 17 Jun 2021 04:33 PM

குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் சேவை; செட்டாப் பாக்ஸ் பிரச்சினையா?- புகார் அளிக்க உதவி எண்: அமைச்சர் மனோ தங்கராஜ் 

சென்னை

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் அளிக்கலாம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்பவியல் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணமின்றி, இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைந்த மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த கட்டணம் ஆகும்.

குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்களை வழங்கி வருகின்றது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையை விரும்பும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆபரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். அவ்வாறு பொதுமக்களுக்கு அரசின் சேவையை கேபிள் ஆபரேட்டர் வழங்கவில்லை என்றால் கட்டணமில்லா தொலைபேசி எண் 180042 52911 மூலம் பொதுமக்கள் புகார் செய்யலாம்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்கள் பழுது அடைந்தாலோ, மாதாந்திரக் கட்டணம் செலுத்தாமல் துண்டிப்பு செய்யப்பட்டிருந்தாலோ, அல்லது சந்தாதாரர் குடிபெயர்ந்து வேறு இடத்திற்குச் சென்றாலோ, அல்லது தனியார் செட்டாப் பாக்ஸ்களைப் பயன்படுத்தினாலோ, இந்நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் மற்றும் ரிமோட் அடாப்டர் ஆகியவற்றை அந்தப் பகுதியில் உள்ள அரசு செட்டாப் பாக்ஸை வழங்கிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் அதனை அவர்கள் அரசு கேபிள் டிவி அலுவலகத்தில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். ஒருசில கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சேவையை வழங்குவதற்காக இந்நிறுவனத்திடமிருந்து செட்டாப் பாக்ஸ்களைப் பெற்றுக்கொண்டு, அதைப் பொதுமக்களுக்கு வழங்காமல், தங்கள் சுய லாபத்திற்காக, தனியார் நிறுவன செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக வசூல் செய்வதாக, புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு இவ்வாறு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை மூன்று மாதங்களுக்கு மேலாகச் செயலாக்கம் செய்யாமலும், அவ்வாறு செயலாக்கம் செய்யாத செட்டாப் பாக்ஸ்களைத் திரும்ப ஒப்படைக்காத கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு தகவல் தொழில்நுட்பவியல் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x