Published : 17 Jun 2021 04:28 PM
Last Updated : 17 Jun 2021 04:28 PM

நீர்நிலைகளில் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

நீர்நிலைகளில் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் கான்கிரீட் சுவர் எழுப்பும் திட்டத்துக்குத் தடை கோரி, இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச்சங்கம் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கு, கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, பஞ்சாயத்து மற்றும் தாலுக்கா அளவிலான நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் நடைமுறையை மேற்கொள்ளுமாறு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று (ஜூன் 17) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதுவரை பதிவேற்றம் செய்யப்படவில்லை என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், கரோனா பரவல் மற்றும் ஊரடங்கு நடைமுறைகள் காரணமாக பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவித்ததுடன், சர்வே எண்களுடன் அதி துல்லிய புகைப்படங்களை 3 வாரங்களில் பதிவேற்றம் செய்யத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

மேலும், நீர்நிலைகளைச் சிதைக்காமல் காக்க வேண்டும் என்றும், நீர்நிலைகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x