Published : 17 Jun 2021 01:07 PM
Last Updated : 17 Jun 2021 01:07 PM

யூடியூபர் மதனின் சகிக்க முடியாத பேச்சைக் கேட்டுவிட்டு பிறகு வந்து வாதிடுங்கள்: வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை

யூடியூபர் மதனின் பேச்சுகள் கேட்க முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாகத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அதைக் கேட்டுவிட்டு வந்து வாதிடும்படி முன்ஜாமீன் வழக்கில் ஆஜரான வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளது.

மதன்குமார் என்பவர் சிறுவர்கள் அதிகம் விரும்பி விளையாடும் 'பப்ஜி' போன்ற விளையாட்டுகளின் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, டாக்சிக் மதன் 18+ என்னும் யூடியூப் சேனலைத் தொடங்கி ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

பப்ஜி விளையாட்டில் திறமையாக விளையாடும் மதன், ஒருகட்டத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த ஆரம்பித்ததால், அவரின் யூடியூப் சேனலைப் பின்பற்றுவோர் அதிகமாகி, 7.8 லட்சம் பார்வையாளர்கள் இணைந்தனர். இதனால் மாதம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் சம்பாதித்தார் மதன். இதனால் அவரது அத்துமீறல் அதிகரித்தது.

யூடியூபில் ஆபாசமாகப் பேசுவது, பெண்களை இழிவாகப் பேசுவது, திட்டுவது, சிறுவர் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மதனுக்கு ஆட்சேபம் தெரிவித்தபோது உங்களால் முடிந்ததை செய்துகொள்ளுங்கள் என ஆணவமாகப் பேசி இப்படித்தான் தொடர்வேன் என மிரட்டினார்.

ஒருகட்டத்தில் எல்லை மீறிய மதனின் யூடியூப் சேனல் மீது, சைபர் க்ரைம் பிரிவு போலீஸாரிடம் புகார்கள் குவிந்தன. மேலும், மாநிலக் குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு அமைப்பு மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவிலும் புகார்கள் கொடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சென்னை மாநகரக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணைக்காக மதனை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் பப்ஜி மதன் தலைமறைவானார்.

இதனையடுத்து அவரை போலீஸார் தேடினர். ஆனால், அவர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸாரிடம் சிக்காமல் தப்பித்து வந்தார். அவரது சொந்த ஊரான சேலத்துக்கும் போலீஸார் சென்றனர். பின்னர் அவரது தந்தை, மனைவி கிருத்திகா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரித்தனர்.

மனைவி கிருத்திகாவின் பெயரில் யூடியூப் இயங்குவதும், அவர் அதன் பங்குதாரர் என்பதாலும் அவரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர். மதன் மீது சிறுவர்களைத் தவறாக வழிநடத்தியது, பெண்களை ஆபாசமாகப் பேசியது, தடை செய்யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் முன்ஜாமீன் கோரி பப்ஜி மதன் என்கிற மதன்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மதன்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சக தொழில் போட்டியாளர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதனின் யூடியூப் சேனலை விரும்பிப் பார்ப்பவர்களில் 30 சதவீதத்தினர் பள்ளி மாணவர்கள். ஆபாசப் பேச்சுகள் மூலம் குழந்தைகளைக் கெடுக்கும் வகையிலும், பெண்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

அவருக்கு உதவியாக இருந்த அவரது மனைவி கிருத்திகா நேற்று கைது செய்யப்பட்டு, ஜூன் 30 வரை நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள மதனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது'' எனத் தெரிவித்தார்.

பின்னர் மதனின் ஆடியோக்கள் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அதனைக் கேட்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, மதனின் பேச்சைக் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவிற்கு இருப்பதாக நீதிபதி தண்டபாணி தெரிவித்தார். யூடியூப் பதிவில் மதன் பேசியதை நீங்கள் கேட்டுள்ளீர்களா? என மனுதாரரின் வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பியபோது, வழக்கிற்காக சில பகுதிகளைக் கேட்டதாக வழக்கறிஞர் பதிலளித்தார். அந்தப் பதிவுகளைக் கேட்டுவிட்டு நாளை வந்து வாதிடுங்கள் என உத்தரவிட்டு, நீதிபதி வழக்கைத் தள்ளிவைத்தார்.

அதேசமயம் மதனின் யூடியூப் பதிவுகளை ஒன்றாகச் சேர்த்து, சி.டி.யாகவோ, பென் டிரைவாகவோ தாக்கல் செய்யக் காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x