

ஆட்டோவில் பயணம் செய்ய இ-பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்கள், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊரடங்கால் ஆட்டோ, கட்டுமானம், தையல், மீன்பிடி, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் முற்றாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
இவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு என்கிற முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
கரோனா பேரிடரால் திருவிழாக்கள், பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ரத்து செய்யப்பட்டுள்ளன. கரோனா 3-வது அலை ஏற்படும் என்ற அச்சம் கலந்த சூழ்நிலையில், அடுத்த பல மாதங்களுக்கும் கோயில் திருவிழாக்கள், நாடகங்கள் அனைத்தும் நடத்துவதற்கான வாய்ப்பற்ற நிலையே நீடிக்கிறது.
எனவே, தமிழக அரசு கோயில்களில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கியதுபோல, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும், சலவைத் தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட 17 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வருமான இழப்பை சரி செய்வதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், குறைந்தபட்ச தொகையாக ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
வாகனங்களுக்கு எப்.சி. எடுக்கும் காலம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் உள்ளிட்ட அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்கும் வரும் டிசம்பர் வரை கால நீட்டிப்பு செய்வதுடன், இஎம்ஐ செலுத்துவதற்கான காலத்தையும் டிசம்பர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.