Published : 17 Jun 2021 03:12 AM
Last Updated : 17 Jun 2021 03:12 AM

ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாலை, இரவில் தீவிர வாகன சோதனை

சென்னை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாலை மற்றும் இரவு நேரங்களில் தீவிர வாகன சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 21-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 14-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக சாலைகளில் ஆங்காங்கே நின்று வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, இ-பதிவு போன்ற முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வந்தனர். ஆனால், பெரிய அளவில் கெடுபிடிகள் எதுவும் காட்டப்படவில்லை.

ஆனால், மாலை 5 மணிக்கு பிறகும், இரவிலும் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் உத்தரவின்பேரில் இவ்வாறு சோதனை நடத்துவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், மாநில எல்லைகளிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 68 நாட்களில், முகக் கவசம் அணியாதவர்கள் மீது 14 லட்சத்து 57 ஆயிரத்து 895 வழக்குகளும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 77 ஆயிரத்து 208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x