Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM

கரோனா 3-வது அலையை சமாளிக்கும் கட்டமைப்பு உள்ளது: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கரோனா தொற்றின் 3-வது அலைவந்தாலும், அதைச் சமாளிக்க போதிய கட்டமைப்பு உள்ளது என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ரூ.1.30 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள, ஒருநிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை டீன் சாந்திமலர்,ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.மணி,ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழகத்தில் கோவை, பொன்னேரி, செங்கல்பட்டு உட்பட 5 இடங்களில் நிரந்தர ஆக்சிஜன் உற்பத்திநிலையம் அமைக்க உதயநிதி ஸ்டாலினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் முதல் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 70 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கரோனாதொற்று 3-வது அலை வந்தாலும்,அதைச் சமாளிக்க போதிய கட்டமைப்புகள் அரசிடம் உள்ளது.

மேலும் 3-வது அலையை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 1,737 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருப்பு பூஞ்சைக்கான சிறப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.மணி கூறும்போது, “இந்த ஆக்சிஜன் இயந்திரம் ஒரு நிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும். இந்த மருத்துவமனையில் மொத்தம்834 படுக்கைகள் உள்ளன. இதில், 600 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகொண்டவை. இந்த 600 படுக்கைகளுக்கு இயந்திரத்தின் மூலம் ஆக்சிஜன் வழங்க முடியும்” என்றார்.

தொடர்ந்து, சென்னை திருவொற்றியூர் மண்டல அலுவலகம் அருகில்உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கிவைத்தார். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, எம்எல்ஏக்கள் சுதர்சனம், சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்துக்கு இதுவரை 1 கோடியே 10 லட்சத்து 41,030 தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில், இதுவரை 1 கோடியே 5 லட்சத்து 97,418 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்றைய தினம், 6 லட்சத்து 16,660தடுப்பூசிகள் ஹைதராபாத், புனேவில் இருந்து வந்துள்ளன. இந்த தடுப்பூசிகளை மாவட்ட வாரியாக அனுப்பும் பணி நடந்து வருகிறது.

கரோனாவில் இறந்த அனைவருக்கும் நிதி உதவி வழங்கப்படவில்லை. கரோனாவால், தாய் தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தைக்குத்தான் நிதி உதவி வழங்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு, அதன்பிறகு தாய்-தந்தை என இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கும் கருணை அடிப்படையில் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x