Published : 15 Jun 2021 07:56 PM
Last Updated : 15 Jun 2021 07:56 PM

நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

புத்தகத்தை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்.

சென்னை

நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை என, முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள தேவங்குடி என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி - நாகலட்சுமி ஆகியோரின் இரண்டாம் மகனாக, 28.06.1921இல் பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தான கலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து (18.11.1982) 39 ஆண்டுகளாகி விட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ் இன்றும் ஓங்கியே இருக்கிறது.

அவருடைய புனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம் படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடி எழுத்தாளராவார்.

அவர் எழுத்தில் காவிரியும் இசையும் தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டா மனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப் பதிவுபெற்றுள்ளன. சாகித்ய அகாடமி விருது (1979) பெற்ற தி.ஜானகிராமனின் (28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறு எழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப் பெற்று, 'ஜானகிராமம்' என்ற தலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத் தொகுத்துள்ளார். இந்நூலைக் 'காலச்சுவடு' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இன்று (ஜூன் 15) மாலை 6 மணிக்கு, ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில், எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவைக் (1921-2021) கொண்டாடும் 'ஜானகிராமம்' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, 'விப்ராஸ் ஆர்ட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார்.

அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை. அவரது படைப்புகள் குறித்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில், இந்நூலின் தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷா ராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x