சென்னையில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன: மாநகராட்சி ஆணையர் தகவல்

ககன்தீப் சிங் பேடி: கோப்புப் படம்.
ககன்தீப் சிங் பேடி: கோப்புப் படம்.
Updated on
1 min read

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5,839 கோவிட் தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன என, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன்15) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கும் வகையில், கோவிட் தடுப்பூசி செலுத்தும் மாநகராட்சியின் அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி, வரிசையில் காத்திருக்காமல், தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் 97007 99993 என்ற காணொலி உதவி எண்களின் வாயிலாகப் பதிவு செய்யலாம். இந்த உதவி எண்கள் மூலம் பதிவு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையில் தற்காலிக தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல இயலாத மாற்றுத்திறனாளிகள் எனக் கண்டறியப்பட்ட நபர்களுக்கு அவர்களின் வீடு அல்லது மிக அருகாமையில் சென்று தடுப்பூசி செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியுடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்த மண்டலத்திற்கு ஒரு வாகனம் என, 15 வாகனங்களை ரோட்டரி சங்கம் வழங்கியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, சென்னையில் இதுநாள் வரை 5,839 தடுப்பூசிகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளன என, ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in