Published : 15 Jun 2021 01:50 PM
Last Updated : 15 Jun 2021 01:50 PM

டாஸ்மாக் கடைகள் திறப்பு: அதிமுக ஆட்சியில் பாமக அமைதி காத்தது ஏன்?- அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி

படம்: க.ராதாகிருஷ்ணன்

கரூர்

ஊரடங்கு தளர்வுகளால் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் தேவைப்படாது எனக் கருதுவதாக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-ம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் (பொ) எம்.லியாகத் தலைமையில் கரூர் படிக்கட்டுத்துறை ரேஷன் கடை அருகே இன்று (ஜூன் 15-ம் தேதி) நடைபெற்றது.

கூட்டுறவு இணைப் பதிவாளர் காந்திநாதன் வரவேற்றார். மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி 2-ம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைத் தொகுப்பை வழங்கிச் சிறப்புரையாற்றினார். கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கரூர் காந்திநகர் ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி, மளிகைத் தொகுப்பை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.

அதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''மின் கட்டணம் செலுத்த ஏற்கெனவே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு தொழில் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. அதனால் மேலும் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாச நீட்டிப்பு என்பது முதல்வர் எடுக்கவேண்டிய முடிவு. ஆனால் ஊரடங்கு தளர்வுகளால், நீட்டிப்பு என்ற கால அவகாசம் தேவைப்படாது என்று கருதுகிறேன்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்திருந்தது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலிலும் கூட்டணி வைத்திருந்தது. கடந்த ஆண்டு கரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அப்போது பாமக அமைதியாக இருந்தது.

கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே கர்நாடகாவில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது போன்றவை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.

பாஜகவும் டாஸ்மாக் கடை திறப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. மக்கள் மீது அக்கறை இருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கவேண்டும். அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தாதவர்கள், மக்களிடம் தங்கள் இருப்பைக் காட்டப் போராட்டம் நடத்தியுள்ளனர். அரசைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டக்கூடிய நல்ல அரசை முதல்வர் நடத்திக் கொண்டு இருக்கிறார்''.

இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x