Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

கோயம்பேடு சந்தையில் 12 நாட்களில் 5,590 பேருக்கு கரோனா தடுப்பூசி

சென்னை

சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த 12 நாட்களில் 5,590 பேருக்குகரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது கோயம்பேடு சந்தையில் தொற்று அதிகமாகப் பரவியது. மேலும், கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலப் பகுதிகளிலும் தொற்று பரவியது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே 5-ம் தேதி சந்தை மூடப்பட்டு, தொற்று குறைந்தபிறகு செப்டம்பர் மாதம் திறக்கப்பட்டது.

இந்த சந்தைக்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். மேலும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகளும் வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் இருப்பவர்களால், வெளியில் இருந்து வரும் சில்லறை வியாபாரிகளுக்கு தொற்றுபரவுவதைத் தடுக்கும் வகையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அங்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வுசெய்தபோது, பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை சந்தைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று சந்தை நிர்வாகத்துக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக சந்தை நிர்வாகம், சந்தையில் உள்ள பல்வேறுசங்கங்களுக்கு தெரிவித்திருந்த நிலையில், தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த மே 31-ம் தேதி வரை 4,742 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சந்தை நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாக கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மட்டும்5,590 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, இந்த சந்தையில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டோர் எண்ணிக்கை 10,332-ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x