Published : 15 Jun 2021 03:14 AM
Last Updated : 15 Jun 2021 03:14 AM

சென்னை- குமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலை: பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார்.

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின்கீழ் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொடக்க விழா திருச்செந்தூரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து விஎம் சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.435 கோடி மதிப்பீட்டிலும், கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடி மதிப்பீட்டிலும் சென்னை - கன்னியாகுமரி இண்டஸ்டிரியல் காடியர் திட்டத்தின் கீழ் (தொழில் வழித்தடம்) மாநில நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள சாலையில் இருக்கும் வளைவுகள் நேர் செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவுப்படி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த சாலைப் பணிகள்2 ஆண்டு காலத்துக்குள் முடிக்கப்படும். தமிழகம் தொழில் வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும். அதற்காக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 7 மீட்டர் அகலம் கொண்ட இந்தச் சாலை 10 மீட்டர் அகலத்தில் விரிவாக்கப்பட உள்ளது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

மேலும் ஏதேனும் நில எடுப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இச்சாலை அமைப்பதன் மூலம் தென்காசி பகுதியில் இருந்து இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை நேரடியாக கொண்டு வர வசதி ஏற்படும். மேலும், குலசேகரன்பட்டினம் பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. தென் பகுதியை நோக்கிதொழில்கள் அதிகளவில் வர வேண்டும் என்பதற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x