

61 நாள் மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து விசைப்படகு மீனவர்கள் நாளை (ஜூன் 15) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தூத்துக்குடியில் விசைப்படகுகள் சுழற்சி முறையில் கடலுக்கு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம், தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளில் 420 விசைப்படகுகள் கடந்த 61 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தடைக்காலம் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நாளை (ஜூன் 15) முதல் கடலுக்க மீன்பிடிக்க செல்கின்றனர். கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இன்று நடைபெற்றது.
மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர் தலைமை வகித்தார். தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் விஜயராகவன், வயோலா மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் மொத்தமுள்ள 240 விசைப்படகுகளை 2 ஆக பிரித்து 120 படகுகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும், மீதமுள்ள 120 படகுகள் செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களிலும் சுழற்சி முறையில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படும். குறைந்த எண்ணிக்கையிலான மொத்த வியாபாரிகள் மட்டுமே மீன்களை வாங்க மீன்பிடித் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை வாங்கிட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
பிடித்து வரும் மீன்கள் அன்று இரவே சமூக இடைவெளியைக் கடைபிடித்து விற்பனை செய்யப்படும். மீன்பிடித் துறைமுகத்துக்கு வரும் விசைப்படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஏலம் விடுவோர், ஐஸ் கொண்டு வருவோர் என அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்தல் போன்ற கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மீன்பிடித் துறைமுகத்துக்குள் வரும் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
இதனை காவல் துறையினர் கண்காணிப்பு கோபுரம் அமைத்து தீவிரமாக கண்காணிப்பார்கள். மீன்களை வகை பிரித்து தனித்தனி இடத்தில் வைத்து விற்பனை செய்ய வேண்டும். மீன்பிடித் துறைமுகத்துக்கு வரும் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் ஏலமிடுவோர், வியாபாரிகள் என அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தி கரோனா தடுப்பூசி போடப்படும் என்பன உள்ளிட்ட 22 முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி மீன்பிடித் துறைமுகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 50 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.