Last Updated : 14 Jun, 2021 02:58 PM

 

Published : 14 Jun 2021 02:58 PM
Last Updated : 14 Jun 2021 02:58 PM

திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை: அமைச்சர் தொடங்கிவைத்தார்

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலைப் பணிகள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடி செலவில் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை- கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர்- பாளையங்கோட்டை, கோபாலசமுத்திரம்- கல்லிடைக்குறிச்சி இடையே ரூ.637 கோடியில் சாலை விரிவாக்கம் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான தொடக்க விழா திருச்செந்தூரில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார்.

இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து விஎம் சத்திரம் வழியாக பாளையங்கோட்டை வரை 50.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.435 கோடி மதிப்பிட்டிலும் கோபாலசமுத்திரம் முதல் கல்லிடைக்குறிச்சி வரை ரூ.202 கோடி மதிப்பிட்டிலும் சென்னை - கன்னியாகுமரி இண்டர்ஸ்டிரியல் காரிடார் திட்டத்தின் கீழ் (தொழில் வழித்தடம்) மாநில நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

ஏற்கெனவே உள்ள சாலையில் இருக்கும் வளைவுகள் நேர் செய்யப்பட்டு புதிய சாலை அமைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் உத்தரவுப்படி சாலை பணிகள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணிகள் 2 ஆண்டு காலத்துக்குள் முடிக்கப்படும்.

தமிழகம் தொழில் வளர்ச்சியில் மேன்மை அடைய வேண்டும். அதற்காக சாலை வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் இந்த சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாலை 7 மீட்டர் அகலம் கொண்டாக இருக்கிறது. இந்த சாலை10 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளது. இச்சாலையில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

மேலும் ஏதெனும் நில எடுப்பு செய்யப்பட்டால் அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இச்சாலை அமைப்பதன் மூலம் தென்காசி பகுதியில் இருந்து இந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைக்கு தேவையான பொருட்கள் நேரடியாக கொண்டு வர வசதியாக இருக்கும். மேலும் இப்பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. தொழில்கள் அதிகளவில் தென் பகுதியை நோக்கி வர வேண்டும் என்பதற்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் என்றார் அமைச்சர்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ்சிங், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்ரியா, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பி.கீதா, உதவி கோட்ட பொறியாளர் நிர்மலா சாக்லின், உதவி பொறியாளர் ஹரிகரசுதன், வட்டாட்சியர் முருகவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x