Published : 14 Jun 2021 01:24 PM
Last Updated : 14 Jun 2021 01:24 PM

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: துணைத் தலைவர், கொறடா யார்?- தேர்வு தொடங்கியது

அதிமுக சட்டப்பேரவை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் சென்னையில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர், கொறடா ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய திமுக ஆட்சி அமைத்தது. 65 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும்போது ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. பின்னர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனாலும் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது. இதனால் கட்சித் தலைமையால் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்வு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 21-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக தலைமை உள்ளது.

இதையடுத்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி மேற்கண்ட இரண்டு பதவிகளுக்கும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வது என முடிவெடுக்கப்பட்டு ஜூன் 14 அன்று நண்பகல் 12 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்கு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், இன்னும் பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜூன் 14 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளதால் கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் கட்சி கொறடா, சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவரைத் தேர்வு செய்வது குறித்துப் பேசப்படும். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எப்படிச் செயல்படுவது, என்னென்ன பிரச்சினைகள் எழுப்புவது என்பது குறித்தும் பேசப்படும்.

அதேபோன்று தற்போது அதிமுகவில் எழுந்துள்ள சசிகலா ஆடியோ டேப் விவகாரம் குறித்தும் பேசப்படும் எனத் தெரிகிறது. சட்டப்பேரவை அதிமுக துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. கொறடாவாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x