Published : 14 Jun 2021 11:02 AM
Last Updated : 14 Jun 2021 11:02 AM

இன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை: ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்

அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இன்று முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியும் தொடங்கியது. ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் முதல் அலை காரணமாகக் கடந்த ஆண்டு பள்ளிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இடையில் அலை ஓய்ந்திருந்தபோது 9,10,11,12ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுச் செயல்பட்டன. ஆனால், பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்துப் பள்ளிகள் மூடப்பட்டன.

இதனிடையே இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விடக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றது. ஒருநாள் தொற்று எண்ணிக்கை 36,000 என உச்சம் தொட்டது. இதனால் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு நடக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கைத் தொடர்ச்சியாக அமல்படுத்தியதால் கரோனா அலை பரவல் குறைந்து 16,000 என்கிற அளவுக்கு தினசரி தொற்று எண்ணிக்கை உள்ளது.

இதையடுத்து ஜூன் 3-வது வாரத்தில் பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பள்ளிப் பாடப் புத்தகங்களும் வழங்கும் நிலையில் தயாராக உள்ளன. மாணவர் சேர்க்கைக்காகப் பள்ளி அலுவலகங்கள் இயங்க வேண்டும், தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் ஜூன் 14 முதல் பள்ளிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன. 6 கோடி இலவசப் பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டுவிட்டன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் இன்று முதல் (ஜூன் 14) மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. 9ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. இன்று முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களும் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் மாணவர் சேர்க்கை, புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் மாணவ, மாணவியர்கள் பெற்றோருடன் ஆர்வத்துடன் வந்து படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து வருகின்றனர். மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

பள்ளிக்கு அதிக அளவில் மாணவர்கள், பெற்றோர்கள் குவிவதால் அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடித்து மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பெரும்பாலும் மாணவர்கள் பயின்ற பள்ளியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வெளியிலிருந்து வந்து சேர விண்ணப்பித்தாலும் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒரே பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்தால் கூடுதலாக 15% வரை இடங்களை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் மாணவர்கள் குவிவதைத் தடுக்க ஒருவார இடைவெளியில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஒரு நாளைக்கு 30 மாணவர்கள் என்கிற அடிப்படையில் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடக்க உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x