Published : 13 Jun 2021 08:13 PM
Last Updated : 13 Jun 2021 08:13 PM

நாளை முதல் மாணவர் சேர்க்கை, பாடப் புத்தகங்கள் வழங்கும் பணி: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை

அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் முதல் அலை காரணமாகக் கடந்த ஆண்டு பள்ளிகள் இயங்கவில்லை. ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. இடையில் அலை ஓய்ந்திருந்தபோது 9,10,11,12ஆம் வகுப்புகள் திறக்கப்பட்டுச் செயல்பட்டன. ஆனால் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டன.

இதனிடையே இரண்டாம் அலையின் பரவல் முதல் அலையின் பரவலை விட கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றது. ஒரு நாள் தொற்று எண்ணிக்கை 36,000 என உச்சம் தொட்டது. இதனால் அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வு நடக்காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கைத் தொடர்ச்சியாக அமல்படுத்தியதால் கரோனா அலை பரவல் குறைந்து 16,000 என்கிற அளவுக்கு தினசரி தொற்று எண்ணிக்கை உள்ளது.

இதையடுத்து ஜூன் 3-வது வாரத்தில் பிளஸ் 1 வகுப்புகளைத் தொடங்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. பள்ளிப் பாடப் புத்தகங்களும் வழங்கும் நிலையில் தயாராக உள்ளன. மாணவர் சேர்க்கைக்காகப் பள்ளி அலுவலகங்கள் இயங்க வேண்டும், தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் ஜூன் 14 முதல் பள்ளிகளுக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பாடப்புத்தகங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அச்சடித்து முடிக்கப்பட்டுள்ளன. 6 கோடி இலவசப் பாடப் புத்தகங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் முழுமையாக அனுப்பப்பட்டுவிட்டன. பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் புத்தகங்கள் உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், நாளை முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாளை முதல் போதிய சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x