Last Updated : 13 Jun, 2021 06:29 PM

2  

Published : 13 Jun 2021 06:29 PM
Last Updated : 13 Jun 2021 06:29 PM

புதுச்சேரி தனியார் பள்ளி கட்டண விவகாரம்; கல்வித்துறையை முற்றுகையிட்டுப் போராட்டம்: திமுக அறிவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரி அரசு தனியார் பள்ளிகளின் கட்டண விவகாரத்தில் தலையிடாததால் கல்வித்துறையை முற்றுகையிட்டு நாளை போராட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா கூறுகையில், "கரோனாவால் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைனில் எடுத்தன. ஆனால், முழுக் கட்டணத்தையும் கேட்டு நிர்பந்தித்தன. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் புதுச்சேரியில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா எனப் பள்ளிக் கல்வித்துறை கண்காணிக்கவில்லை.

சில பள்ளிகள் மட்டுமே கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி 75 சதவீதக் கட்டணத்தை மட்டுமே வசூலித்தன. பெரும்பாலான பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறிப் போக்குவரத்துக் கட்டணம், சிறப்பு வகுப்புக் கட்டணம், விளையாட்டு உபகரணங்கள் கட்டணம், ஆய்வகக் கட்டணம் என்று நடைபெறாத அனைத்திற்கும் முழுக் கட்டணம் வசூல் செய்தன. அதேசமயம் அப்பள்ளிகளில் பெரும்பாலானவை ஆசிரியர்களுக்கு பாதி சம்பளத்தை மட்டுமே வழங்கின. ஒருசில பள்ளிகள் முழு சம்பளத்தையும் வழங்கவில்லை.

புதுச்சேரியில் தனியார் பள்ளிகள் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளதா? என்ற ஐயம் பொதுமக்களிடம் நிலவி வருகிறது. எனவே தனியார் பள்ளிகளில் கட்டணம் மற்றும் மதிப்பெண் விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை உடனடியாகத் தலையிட்டுத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதாவது ஆன்லைன் வகுப்பிற்கு ஏற்ப மட்டுமே கட்டணம் வசூலிக்கச் செய்ய வேண்டும். மதிப்பெண் வழங்கவும் தனியாக ஒரு குழுவை பள்ளிக் கல்வித்துறையே ஏற்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தி கல்வித்துறையை முற்றுகையிடும் போராட்டத்தை நாளை நடத்துகிறோம். இதில் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பங்கேற்பார்கள்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x