Last Updated : 13 Jun, 2021 05:37 PM

 

Published : 13 Jun 2021 05:37 PM
Last Updated : 13 Jun 2021 05:37 PM

புதுச்சேரியில் முதல் முறையாகப் போட்டியின்றி சபாநாயகராகிறார் பாஜக எம்எல்ஏ

புதுச்சேரியில் முதல் முறையாக பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியின்றி சபாநாயகர் ஆகிறார். வரும் 16-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது பதவியேற்கிறார்.

புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி வென்றது. முதல்வராக ரங்கசாமி மட்டும் பொறுப்பேற்றுள்ளார். அதையடுத்து அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. எனினும் 40 நாட்களைக் கடந்தும் அமைச்சரவை அமையாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக தரப்பில் சபாநாயகர், அமைச்சர்கள் பட்டியலை மேலிடம் உறுதி செய்து தந்துள்ளது. அதில் சபாநாயகராக செல்வமும், அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் பெயர்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், இதை முதல்வர் அறிவிப்பார் என்று பாஜக தரப்பில் தெரிவித்துவிட்டனர்.

இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸில் யார் யாருக்கு அமைச்சர் பொறுப்பு என்பதை ரங்கசாமி முடிவு எடுத்துவிட்டார். நாளை வளர்பிறை, நல்ல நாளாக இருப்பதால் முதல்வர் ரங்கசாமி அமைச்சரவைப் பட்டியலை ராஜ்நிவாஸில் அளிக்க உள்ளதாக அவரது தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக வட்டாரங்களில் விசாரித்தபோது, "பாஜக எம்எல்ஏவான செல்வம் நாளை சபாநாயகர் தேர்தலுக்கான மனுவை சட்டப்பேரவைச் செயலரிடம் அளிக்கிறார். புதுச்சேரியில் வரும் 16-ம் தேதி காலை பாஜக எம்எல்ஏ செல்வம் சபாநாயகராகப் போட்டியின்றி அறிவிக்கப்பட உள்ளார். இவர் 21-வது சபாநாயகர். தேர்தலில் வென்று முதல் முறையாக பாஜக எம்எல்ஏ சபாநாயகராகிறார். சபாநாயகர் இருக்கையில் செல்வத்தை முதல்வர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் சிவாவும் அமர வைப்பார்கள். அதையடுத்து சபாநாயகர் உரை இடம் பெறும்" என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x