Published : 13 Jun 2021 04:18 PM
Last Updated : 13 Jun 2021 04:18 PM

நீலகிரியில் வனக் குற்றங்களைக் கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்

உதகை

நீலகிரி மாவட்டத்தில் வனக் குற்றங்களைக் கண்டறிய, 'சிப்பிப்பாறை' இனத்தைச் சேர்ந்த இரு மோப்ப நாய்களுக்கு வனத்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டுள்ளன.

65 சதவித வனப் பகுதியைக் கொண்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முதுமலை புலிகள் காப்பகம், முக்குருத்தி பூங்கா, நீலகிரி வனக்கோட்டம், கூடலூர் வனக்கோட்டம் ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இங்கு காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், வனக்கொள்ளை, வன விலங்குகள் வேட்டை ஆகியவற்றைத் தடுக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில், வனக் குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கண்டறிவதற்காகத் தமிழ்நாடு வனத்துறை சார்பாக சமீபகாலமாக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாடு வனத்துறைக்கு முதன்முதலாக 2017-ம் ஆண்டு ஆஃபர் என்ற மோப்ப நாய் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வந்த இந்த நாய் உடல்நலக் குறைவு காராணமாகக் கடந்த ஆண்டு உயிரிழந்தது. இந்நிலையில், தற்போது சிப்பிப்பாறை ரகத்தைச் சேர்ந்த நாய்கள் நீலகிரி மற்றும் கூடலூர் வனக்கோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி வனத்தில் சந்தனம், ஈட்டி மரங்களை வெட்டிக் கடத்துவது, வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவது போன்ற சட்டவிரோத வனக் குற்றங்களைக் கண்டறியும் பொருட்டு புலிகள் காப்பகங்கள், வனச் சரணாலயங்களில் மோப்ப நாய்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த, ஆறு மாதமான, இரு நாய்க்குட்டிகள் நீலகிரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

நீலகிரி வனக்கோட்டத்துக்கு, 'காளிங்கன்' எனப் பெயர் சூட்டப்பட்ட மோப்ப நாயும், கூடலூர் வனக்கோட்டத்துக்கு 'அத்தவை' எனப் பெயரிடப்பட்ட மோப்ப நாயும் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை அருகே உள்ள வைகை வனத்துறை பயிற்சிக் கல்லூரியில் இந்த நாய்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கபட்டுள்ளன. இவற்றைப் பராமரிக்கவும் வனக் குற்றங்கள் ஏற்படும் இடங்களுக்கு அழைத்துச் சென்று குற்றவாளிகளைப் பிடிக்கவும் எம்.சிவராஜ் மற்றும் கே.சதீஷ்குமார் ஆகிய இரு வேட்டை தடுப்புக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்களில் சோதனையிடுதல், சந்தனம், ஈட்டி மரங்களின் வாசனைகளை வைத்து கண்டறிதல், வனக் குற்றங்களைக் கண்டறியும் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறும்போது, "தமிழகத்தைத் தாயகமாகக் கொண்ட நாய்களை வனக் குற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இவை பயிற்சிகளை சுலபமாகக் கற்றுக்கொண்டன. வனப் பாதுகாப்பில் கூடுதல் பலம் சேர்க்கின்றன" என்றார்.

நீலகிரி வனக்கோட்டம் குந்தா சரகத்துக்குட்பட்ட கோத்திபென் வனக்குடியிருப்பு வளாகத்தில் தொடர்ந்து பயிற்சியளிக்கப்படடு வருகிறது. முழுமையான பயிற்சி முடிய இன்னும் ஆறு மாத காலம் ஆகும் என்பதால் முழுமையான பயிற்சிக்குப் பின்னர் வனப் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x