Published : 13 Jun 2021 02:14 PM
Last Updated : 13 Jun 2021 02:14 PM

சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு: விசாரணை சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையும் சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது டேராடூனில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1990களில் பிரபலமானவர் சிவசங்கர் பாபா. நடனமாடியபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிவந்த இவர், பக்தர் ஒருவர் கொடுத்த இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி என்கிற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிக்கினார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர். தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து மேலும் பல பள்ளிகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இது தவிர தடகளப் பயிற்சியாளர் நாகராஜ், ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் உள்ளிட்டோரும் பாலியல் புகாரில் சிக்கி கைதாகினர்.

இதேபோன்ற புகார் சிவசங்கர் பாபா மீதும் எழுந்தது. மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பியது.

பள்ளி நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், நிறுவனர் சிவசங்கர், அவரின் வழக்கறிஞர் நாகராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர், மூன்று ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 11ஆம் தேதி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில், சம்மன் அனுப்பப்பட்டவர்கள் ஆஜராகினர். இதில் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஜானகி என்பவர் ஆஜரானார்.

சிவசங்கர் பாபாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு டேராடூனில் சிகிச்சை பெற்று வருவதாக ஜானகி, ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார். சிவசங்கர் பாபா கடந்த 9ஆம் தேதியே டேராடூனில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

இந்நிலையில் மூன்று வெவ்வேறு புகார்களின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கும் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்கு வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

போக்சோ சட்டத்துக்கு முன்ஜாமீன் கிடைக்காது என்பதால் சிவசங்கர் பாபா கைது செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஆனால், அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தங்கி இருப்பதாலும், உடல் நலமில்லை என்று சான்றிதழ் அளித்துள்ளதாலும் கைது செய்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x