

ஆட்சியில் இல்லாதபோது கருப்புச் சட்டை அணிந்து குடும்ப சகிதமாக போராட்டம் நடத்திவிட்டு தற்போது டாஸ்மாக் கடைகளை திறந்துவிடும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை விநோதமாக இருக்கிறது என்று முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
100 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட 23 வகையான மளிகை பொருட்களை முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான செல்லூர் கே ராஜூ நேற்று வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயந்தி ராஜூ, மாவட்ட கழக துணைச் செயலாளர் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ். பாண்டியன், மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்
அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது;
கூட்டுறவு துறை அமைச்சர் கூறிய குற்றச்சாட்டுகளை நான் சட்டமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளேன். தவறு யார் செய்தாலும் அது ஆண்டவனாக இருந்தாலும் தவறு தவறுதான். ஆட்சியிலும், கட்சியிலும் எந்தத் தவறும் நடைபெறாமல் எம்ஜிஆர், ஜெயலலிதா, தற்போது எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் திறம்பட செய்து காட்டி வருகின்றனர்.
தவறு யார் செய்தாலும் அவர்களை நாங்கள் தண்டித்துள்ளோம். அதுபோல், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அமைச்சர் நடவடிக்கை இருக்கட்டும். அதை நாங்கள் வரவேற்கிறோம்.
கூட்டுறவுத்துறையில் கணினி மயமாக்கப் பட்டதால் தான் இந்தியாவில் காப்பீடு திட்டம் மூலம் அதிக அளவில் காப்பீடு தொகை பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் தான். டாஸ்மார்க் கடையை திறக்க கூடாது என்று கருப்புச்சட்டை அணிந்து குடும்ப சகிதமாக ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். ஆனால் இன்றைக்கு அவரது ஆட்சியில் டாஸ்மாக்கை திறக்க உத்தரவிட்டுள்ளனர்.
இது வினோதமாகவும் வேடிக்கையாக உள்ளது. டாஸ்மாக் கடையை திறக்க உத்தரவிட்ட முதல்வர் தேனீர் கடையை திறக்க உத்தரவிட வேண்டும். ஏன்னெற்றால் சாமானியர்கள் தான் இந்த கடையை நடத்தி வருகின்றனர். அவர்கள் கடை வாடகை கட்ட வேண்டும். அன்றாட வாழ்வாதாரத்திற்காக அவர்கள் உழைக் வேண்டும். டீ கடைகளில் குறைந்தபட்சம் இரண்டு பேர் வேலை பார்க்கின்றனர். அவர்கள் குடும்பம் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்.
இன்றைக்கு கட்டுமானப் பொருட்கள் மளிகைப் பொருள்கள் எல்லாம் கடுமையாக விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோரிடம் ஆலை அதிபர்கள், பெரிய தொழில் அதிபர்கள் ஆகியோர் இடத்தில் இருந்து நிதி வசூல் செய்து தரப்பட வேண்டுமென்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். எங்கள் ஆட்சியில் இது போன்று நிதி தர வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.