Published : 12 Jun 2021 12:22 PM
Last Updated : 12 Jun 2021 12:22 PM

தமிழகத்தில் இன்று மாலைக்குள் 1 கோடி கரோனா தடுப்பூசி: மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் இன்று மாலைக்குள் 1 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலை ஏற்படும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில், வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை இன்று (ஜூன் 12) அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நேற்று (ஜூன் 11) மாலை 3 லட்சத்து 65 ஆயிரம் கரோனா தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்தது. அந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணி இரவே முடிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று 1 லட்சத்து 26 ஆயிரம் கோவேக்சின், 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வரவுள்ளன.

எனவே, ஏற்கெனவே1 கோடியே 6 லட்சத்துடன் சேர்த்து, இன்றைக்கு நான்கே கால் லட்சம் அளவுக்கு தடுப்பூசிகள் வரவுள்ளன. ஆக, 1 கோடியே 10 லட்சம் என்ற அளவில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளன.

ஏற்கெனவே 98 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கும் நிலையில், இன்று தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 1 கோடியை எட்ட வேண்டும் என, மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில், இன்று பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. நிச்சயம் இன்று மாலைக்குள் 1 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற நிலை வரும்.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் சிறப்பாக செயல்படுத்துகின்றனர். இதன்மூலம், 21 லட்சத்து 63 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.

முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப கோயம்பேடு மார்க்கெட்டில் பலதரப்பட்ட வணிகர்களுக்கு மாநகராட்சி, சுகாதாரத்துறை, சிஎம்டிஏ இணைந்து, தடுப்பூசி போடும் பணி விரைவாக நடைபெறுகிறது. நேற்று மாலை வரை 9,550 பேருக்கு இங்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இன்று இங்கு 3 இடங்களில் முகாம்கள் நடக்கின்றன. இன்று மாலைக்குள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும். இதனால், ஒரே இடத்தில் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் என்ற பெருமையை அகில இந்திய அளவில் கூட கோயம்பேடு மார்க்கெட் அடையும்.

காசிமேடு துறைமுக பகுதியில் 2,500 பேருக்கும், சிந்தாதிரிப்பேடை மீன் அங்காடியியில் 100-க்கும் மேற்பட்டோருக்கும் என, கோயம்பேடு மார்க்கெட்டிலும் சேர்த்து, மொத்தமாக 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னயில் 5,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்துவருகிறது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மொத்தமாக, 50,197 படுக்கைகள் காலியாக உள்ளன. இதனால், மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அதிக அளவில் வழங்க வேண்டும் என, பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் நேரிலும் வலியுறுத்துவார்.

கரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் அதே அளவில் இருக்கிறது என எடுத்துக்கொள்ள முடியாது. உயிரிழப்புகள் குறைகின்றன. உயிரிழப்பு இன்னும் குறைய வாய்ப்புள்ளது. கரோனாவைத்தாண்டி பல்வேறு பாதிப்புகளை கொண்டவர்களால் உயிரிழப்பு அதிகரிக்கிறது. எப்படி இருந்தாலும், மரணம் என்பது மனதை உருக்குகிற செயல்தான். அது குறைய வேண்டும்".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x