Last Updated : 11 Jun, 2021 10:21 PM

 

Published : 11 Jun 2021 10:21 PM
Last Updated : 11 Jun 2021 10:21 PM

தேசிய வங்கிகளில் விவசாயக் கடன்களை செலுத்த அவகாசம்: மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை

தேசிய வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களை செலுத்த அவகாசம் வழங்கக்கோரி தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளாக மேட்டூர் அணை குறிப்பிட்ட காலத்தில் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா பகுதியில் 75 சதவீத விளை நிலங்களில் விவசாயம் நடைபெறவில்லை.

தமிழ்நாடு முழுவதும் குளங்கள், ஆறுகள், கிணறு ஆகியற்றில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இல்லாததால் 90 சதவீத விவசாயம் நடைபெறவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயம் சரியாக நடைபெறாததால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி விவசாய சங்கங்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது.

தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் மற்றும் விவசாயத்துக்கான டிராக்டர் மற்றும் பல்வேறு உபகரணங்கள் வாங்க பெறப்பட்ட கடன்களைத் திரும்ப வசூல் செய்வதில் கடுமையான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

விவசாயம் இல்லாதது, கரோனா தொற்று மற்றும் ஊரடங்கால் விவசாயிகள் வறுமையில் வாடுகின்றனர். இதனால் கடன் கட்ட முடியாமல் பல விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட விவசாய கடன்களை திரும்ப செலுத்த 2 ஆண்டுகள் தளர்வு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு ஆகியன மத்திய அரசின் கொள்கை முடிவுடன் தொடர்புடையது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதே நேரத்தில் தமிழக முதல்வர் தேசிய வங்கி, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்து விவசாயத்துக்காக பெறப்பட்ட கடன்களை செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தமிழக முதல்வரின் கோரிக்கை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 8-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x