Published : 11 Jun 2021 07:45 PM
Last Updated : 11 Jun 2021 07:45 PM

சென்னையில் தொற்று குறைந்தாலும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்: மாநகராட்சிக் கூட்டத்தில் முடிவு

ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று (ஜூன் 11) நடைபெற்றது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 11) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று குறைந்துவரும் நிலையில், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வல்லுநர் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று தற்பொழுது வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், கோவிட் தொற்றுத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்து கவனம் செலுத்திடவும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய மருத்துவ வசதிகள் குறித்தும், சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர்/ வணிக வரித்துறை முதன்மைச் செயலாளர் எம்.ஏ.சித்திக், மாநில கோவிட் கட்டுப்பாட்டு அறை ஒருங்கிணைப்பு அலுவலர் தரேஷ் அகமது மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக பிரதிநிதிகள் மனோஜ் முரேக்கர், கணேஷ் குமார் பரசுராமன், பிரதீப் கவுர் ஆகியோருடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தற்பொழுது கோவிட் தொற்று குறைந்து வந்தாலும் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைக்காமல் தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளவும், மேலும், காய்கனி, இறைச்சி விற்பனை மேற்கொள்ளும் மார்க்கெட் பகுதிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு அவ்வப்போது ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் கணக்கெடுப்பு செய்து, அவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களா என்பதையும் கேட்டறிந்து, அதனடிப்படையில் கோவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x