Published : 11 Jun 2021 01:37 PM
Last Updated : 11 Jun 2021 01:37 PM

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும்: எல்.முருகன்

மதுக்கடைகளை நிரந்தரமாக மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, எல்.முருகன் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த ஆண்டு கரோனா நோய்த்தொற்றின் போது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று திமுக போராடிவிட்டு இப்போது மதுக்கடைகளைத் திறக்க முயல்வது என்ன நியாயம்?

மே 7, 2020-ம் தேதி அன்றைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினர் பதாகை ஏந்தி போராடியது ஞாபகத்தில் இல்லையோ?

நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கனிமொழி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது ஆலைகளையே மூடுவோம் என்று தெரிவித்தார்.

'மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்று டாஸ்மாக் கடைகளின் பெயர்ப் பலகைகளிலும், மது பாட்டில்களிலும் எழுதி வைத்துவிட்டு, மதுவை விற்பனை செய்வதை விட பெரிய முரண்பாடு இருக்க முடியாது.

மதுக்கடைகளை மூடினால் அரசின் வருமானம் பாதிக்கப்படும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு இருக்க முடியாது. மதுக்கடைகள் மூடப்பட்டால், அதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட ஏராளமான வழிகள் உள்ளன.

தமிழக அரசோ கரோனா நோய்த்தொற்றின் அபாயம் அதிகம் உள்ள காரனாத்தால், மதுக்கடைகளை மூடியுள்ளது. தற்பொழுது கரோனா நோய்த் தொற்றின் அபாயம் குறைந்து வருகிறது என்பதால், பல மாவட்டங்களில் மதுக்கடைகளைத் திறக்க தயாராகி வருவது தமிழகத்திற்கு பேராபத்தில் முடியும்.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிப்பழக்கம் துறந்து தங்கள் குடும்பத்துடன் அமைதியாக வாழும் தமிழக மக்களை மதுக்கடைகளைத் திறந்து மீண்டும் குடிப்பழக்கத்தில் ஆழ்த்த முயலும் இந்த அபத்தமான முடிவை எதிர்ப்போம். சமுக அக்கறை உள்ள யாரும் இதனை வரவேற்க மாட்டார்கள்.

தமிழக மக்களைக் குடியிலிருந்து மீட்க மதுக்கடைகளை மூடினால், வேறு மாதிரியான சமூகப் பிரச்சினைகள் எல்லாம் வரும் என பயமுறுத்திய சமூக வல்லுநர்கள் கூற்றை இந்த கரோனா தவிடு பொடியாக்கியுள்ளது.

இறைவன் தந்த தீமையில் கிடைத்த நன்மை தான் இந்த மதுக்கடைகளை மூடல்.

அரசு கரோனாவை ஒழிக்க மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் இந்த மதுக்கடைகளைத் திறக்கும் ஒரு நடவடிக்கையால் வீணாகப் போய்விடும்.

'துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்'

மது அருந்துவது விஷத்தைப் போல் என்கிறார் திருவள்ளுவர்.

வேலை இல்லாத இந்தக் காலத்தில் மதுக்கடைகள் திறப்பதின் மூலம் ஏழைகள் கடன் வாங்கி குடிக்க நேரிடும். இது குடும்பத் தலைவிகளுக்கு பாரமாகக் கூடும்.

கரோனா நேரத்தில் மிக அத்தியாவசியமில்லாத இந்தக் கடைகள் திறக்க வேண்டிய அவசியம் என்ன?

மதுக்கடைகள் திறப்பதற்கு அனைத்து தாய்க்குலங்களும் எதிர்ப்பு என்ற நிதர்சனமான உண்மையைத் தமிழக முதல்வர் உணரவேண்டும்.

இன்னும்கூட காலமிருக்கிறது, தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வரட்டும். அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்".

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x