Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM

கூடலூரை அடுத்த நடுவட்டம் பகுதியில் காப்புக்காடு, வருவாய் நிலங்களில் நில அளவை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை

கூடலூர் அருகே நடுவட்டம் கிராமத்தில் காப்புக்காடு, வருவாய் நிலங்களை வனம் மற்றும் வருவாய்த் துறையினர் நில அளவை செய்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த நடுவட்டம் கிராமத்தில் வனப்பகுதியை ஆக்கிரமித்து, ‘ரிசார்ட்' கட்டுவதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் கூடலூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசு மற்றும் வனத்துறைக்கு, முதல் அமர்வு உத்தரவிட்டது.

ரிசார்ட் கட்டுவதற்காக வனத்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வனப்பகுதியில் ஓர் அங்குல நிலத்தைகூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது. இதுதொடர்பாக வனத்துறை உயர் அதிகாரியின் கவனத்துக்கு கொண்டுவந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், கட்டுமானத்தை தொடங்கி இருப்பதாகவும் மனுதாரர் புகார் கூறுகிறார்.

எனவே, நீலகிரி மாவட்ட ஆட்சியரும், வனத்துறை அதிகாரியும் அந்த பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். வனத்துறை நிலம், ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மூன்று வாரங்களில் நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து குழாய் இணைப்பு வாயிலாக தண்ணீர் எடுப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தண்ணீர் எடுக்கப்பட்டால், அதை உடனடியாக நிறுத்த வேண்டும். அதையும் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, நடுவட்டம் பகுதியில் வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார், வனச்சரகர் சிவா, உதகை வட்டாட்சியர் குப்புராஜ் ஆகியோர் வழக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்தனர். அப்பகுதியிலுள்ள காப்புக்காடுகள் மற்றும் வருவாய்த்துறை நிலங்கள் குறித்து நில அளவை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் சரவணகுமார் கூறும்போது, "நீலகிரி வனக்கோட்டம் நடுவட்டம் வனச்சரகத்துக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார் லீஸ் பகுதியில், பட்டாநிலத்தில் கட்டுமானம் நடைபெற்றுள்ளது. கட்டிடம் கட்ட நடுவட்டம்பேரூராட்சி அனுமதி அளித்துள்ளதன்பேரில், மின்சார இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், வனப்பகுதியை ஒட்டி கட்டிடம் அமைந்துள்ளது. ஓடையிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது ஆகியவை விதிமீறல்.

வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி சாலை அமைத்தது, பாறைகளை உடைத்தது தொடர்பாக வழக்குதொடரப்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.வனத்துறையினர் சாலையில் அமைத்த தடையைதகர்த்தது தொடர்பாக வழக்கு தொடர்ப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு, காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி மேற்கண்ட பகுதியில் நில அளவை நடத்தப்பட்டு வருகிறது. அளவை முடிந்த பின்னர் விதிமீறல்கள் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x