Published : 11 Jun 2021 03:14 AM
Last Updated : 11 Jun 2021 03:14 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 52 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு: முகக்கவசம் அணியாத 14,609 பேர் மீது வழக்குப்பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 52 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டுள்ளது.

கரோனா 2-ம் அலையில் தாக்கம் அதிகரித்ததால், கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தது. தொற்று பரவல் சற்று குறையத் தொடங்கிய நிலையில், கடந்த 7-ம் தேதி முதல் தளர்வுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரசு அறிவித்த ஊரடங்கை மீறி செயல்பட்டவர்கள் மீது காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முகக்கவசம் அணியாதவர்கள் மீது 14,609 வழக்குகளும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது 729 வழக்குகளும் என 15,338 வழக்குகள் பதிவு செய்து, அதன் மூலம் ரூ.32,86,300-ஐ அபராதமாக வசூலித்துள்ளனர்.

இதேபோன்று முறையான காரணமின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்கள் , சாலை விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது மொத்தம் 40,227 வழக்குகள் பதிவு செய்து 2,530 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் சூழலில்கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்பனை செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ள காவல்துறையினர், அந்த வகையில் 348 வழக்குகள் பதிவு செய்து, 8,476 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.இதுதவிர கல்வராயன்மலையில் 52,860 லிட்டர் கள்ளச் சாராய ஊறல்களையும் அழித்துள்ளனர்.

இதனிடையே நேற்று கல்வராயன் மலைப்பகுதியில் சின்னசேலம் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி தலைமையிலான போலீஸார் நாகுப்பம் அடிவார வனப்பகுதியில் சோதனை நடத்தினர். இதில் 3 இடங்களில் 15 பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,000 லிட்டர் சாராய ஊறலை போலீஸார் கண்டுபிடித்து அழித்தனர். மேலும் கல்வராயன்மலை மொழிப்பட்டு கிராமத்தில் இளையராஜா என்பவர் வைத்திருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கரியாலூர் போலீஸார் கண்டுபிடித்து அழித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x