Published : 10 Jun 2021 06:48 PM
Last Updated : 10 Jun 2021 06:48 PM

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

சென்னை

தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீறி இயங்கினால் மாவட்டக் கல்வி அதிகாரியே பொறுப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் மழலையர், நர்சரி, பிரைமரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர் அங்கீகாரம் பெற வேண்டும். அதற்கான அங்கீகாரத்தை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.

தொடக்கக் கல்வித்துறையில் ஆண்டுதோறும் அங்கீகாரம் பெறாத பள்ளிகளை மூட வேண்டும் எனத் தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் தொடர் அங்கீகாரம், அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் வகுப்பில் செல்வதிலும் தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தொடக்கக் கல்வித்துறை அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட உத்தரவிட்டு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் பழனிசாமி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டயாகக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 18-ல் அங்கீகாரம், சான்றிதழ் இல்லாமல் எந்தப் பள்ளியும் செயல்படக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், மழலையர்கள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும்.

அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையாக விண்ணப்பிக்காத பள்ளிகளை உடனடியாக 2020-21ஆம் கல்வி ஆண்டுடன் மூடுதல் வழிகாட்டுதல் விதிமுறைகளின்படி, அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க அனுமதி மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு பள்ளியை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

தொடக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால், அந்தப் பள்ளி இயங்கும் பகுதியின் வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலரே பொறுப்பேற்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுமானால் தமிழகத்தில் தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் சுமார் 5000க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x