Last Updated : 10 Jun, 2021 05:17 PM

 

Published : 10 Jun 2021 05:17 PM
Last Updated : 10 Jun 2021 05:17 PM

சவுதியில் கணவர் இறந்த விவரத்தை மறைத்த கட்டுமான நிறுவனம்: சிவகங்கை ஆட்சியரிடம் மனைவி கண்ணீருடன் புகார்

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தனது கணவர் உடலை இந்தியா கொண்டு வர வலியுறுத்தி குழந்தைகளுடன்  மனு கொடுக்க வந்த டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த சவுந்தரம்.

சிவகங்கை

சவுதி அரேபியா நாட்டில் பணிபுரிந்த தனது கணவர் இறந்த விவரத்தை கட்டுமான நிறுவனம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாக சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி கண்ணீருடன் புகார் தெரிவித்தார்.

மானாமதுரை அருகே டி.ஆலங்குளத்தைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜேஸ்வரன் (35). இவருக்கு சவுந்தரம் (25) என்ற மனைவியும், ஜெகதீஸ்வரன் (5), யோகேஸ்வரன் (3) என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக, கடன் வாங்கி கொண்டு கடந்த 2018 ஜூன் 31-ம் தேதி சவுதி அரேபியா நாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.

அங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் கம்பி கட்டும் வேலை செய்தார். இந்நிலையில் ஜூன் 2-ம் தேதி பணியில் இருந்தபோது அவர் மீது கான்கிரீட் தடுப்பு விழுந்து இறந்தார்.

இதுகுறித்து அங்கு பணிபுரிவோர், ராஜேஸ்வரன் மனைவி சவுந்தரத்திற்கு மொபைலில் தெரிவித்துள்ளனர். ஆனால் கட்டுமான நிறுவனமோ ராஜேஸ்வரன் இறந்ததை மறைத்துவிட்டது.

இதையடுத்து இறந்த தனது கணவரின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர வேண்டும். இறப்பை மறைத்த கட்டுமான நிறுவனத்திடம் இருந்து நிவாரணம் பெற்று தர வேண்டுமென தனது 2 குழந்தைகளுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு கொடுத்தார்.

இதுகுறித்து சவுந்தரம் கூறுகையில், ‘ எனது கணவர் வெளிநாடு சென்று 3 ஆண்டுகளாகிவிட்டது. ஒருமுறையாவது அவரது முகத்தைப் பார்க்க வேண்டும். இதனால் அவரது உடலை இந்தியா கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x