Published : 10 Jun 2021 03:41 PM
Last Updated : 10 Jun 2021 03:41 PM

தமிழகத்தில் வறண்ட வானிலை: 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் மீனவர்களை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஜூன் 10 ஜூன் 11 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். வெப்ப சலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 12 அன்று வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 13, ஜூன் 14 ஆகிய தேதிகளில் வெப்பச் சலனத்தின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஒரு சில மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிக பட்ச மழை அளவு

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் (கோவை) வால்பாறை பரம்பிக்குளம் ஆழியார் (கோவை) தலா 2 செ.மீ, அவிநாசி (திருப்பூர்) சின்னகல்லார் (கோவை), சேலம், சோலையாறு (கோவை) தலா 1 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதன் காரணமாக வங்கக்கடல் பகுதியில் ஜூன் 10 முதல் ஜூன் 13 வரை மேற்கு வங்க கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல்

ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை கேரளா, கர்நாடக கடற்கரைப் பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

ஜூன் 10 முதல் ஜூன் 14 வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x