Last Updated : 10 Jun, 2021 03:01 PM

 

Published : 10 Jun 2021 03:01 PM
Last Updated : 10 Jun 2021 03:01 PM

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கையில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய மூன்று இடங்களிலும் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள் இன்று மீண்டும் தொடங்கின.

தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வுப் பணியும் தொடங்கியது.

இந்த அகழாய்வுப் பணியில் சிவகளையில் கல் வட்டங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் கிடைத்தன. அதுபோல கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் 2700 ஆண்டுகள் பழமையான செங்கல் கட்டுமான அமைப்பும், சங்கறுக்கும் தொழிற்சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் தீவிரமடைந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வந்த அகழாய்வு பணிகள் கடந்த மே 10-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது கரோனா தொற்றின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் மீண்டும் அகழாய்வுப் பணிகள் இன்று தொடங்கின. முதற்கட்டமாக அகழாய்வு செய்யப்படும் இடங்கள் மற்றும் குழிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வரும் செப்டம்பர் மாதம் வரை தான் தமிழக தொல்லியல் துறைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. எனவே, அதற்குள் பணிகளை வேகமாக செய்ய வேண்டும் என தொல்லியல் துறை அதிகாரிகள் வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இது குறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, கரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகவே தூத்துககுடி மாவட்டத்தில் அகழாய்வுப் பணி தாமதமாகி வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் காட்டிய 37 இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தோம்.

இதையடுத்து 37 இடங்களிலும் அகழாய்வு செய்ய நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான அதிகாரிகளையும் மாநில அரசு நியமித்தது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது வசவப்பபுரம் பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மழையினால் வெளியே தெரிய தொடங்கியுள்ளன. அவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக வசவப்பபுரம் பகுதியில் ஆய்வாளர்கள் ஆய்வு செய்யவேண்டும். மேலும், கொங்கராயகுறிச்சியில் மணலில் புதைந்து கிடக்கும் ஆலயங்களை நவீன கருவி மூலம் தேடி பார்க்க வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x