Last Updated : 10 Jun, 2021 02:58 PM

 

Published : 10 Jun 2021 02:58 PM
Last Updated : 10 Jun 2021 02:58 PM

கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்: புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

புதுச்சேரி

கரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் 3 மாதத்துக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

‘‘புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் கரோனா தடுப்பூசி, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் போடப்பட்டு வருகிறது. 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் இணையவழி மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது புதுச்சேரி அரசு தடுப்பூசி பற்றிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது. முதல் தவணை கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி செலுத்திய பிறகு 12 முதல் 16 வாரம் இடைவெளியில் இரண்டாம் தவணை செலுத்த வேண்டும். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் தொற்றிலிருந்து மீண்டு மூன்று மாதத்துக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஆன்டிபாடி அல்லது பிளாஸ்மா சிகிச்சை எடுத்துக் கொண்டால் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய 3 மாதத்துக்குப் பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கரோனா தடுப்பூசி முதல் தவணை எடுத்துக்கொண்ட பிறகு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டால் நோய்த் தொற்றில் இருந்து மீண்ட 3 மாதத்துக்குப் பிறகு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

கரோனா அல்லாத வேறு நோய்க்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றிருந்தால் வீடு திரும்பியபின் 4-ல் இருந்து 8 வாரங்களுக்குப் பின் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி போடுவதன் மூலம் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், பயன்களைப் பற்றியும் அறிவித்தபின் அவர்கள் விருப்பம் கொண்டால் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன் ரேபிட் பரிசோதனை அவசியம் இல்லை.

ஒன்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு உள்நாட்டுப் பயணத்தின்போது தனிமைப்படுத்துதல், கரோனா பரிசோதனை (ஆர்டிபிசிஆர் நெகட்டிவ்) சான்றிதழ் தேவையில்லை. இதுகுறித்துப் பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் அணுகலாம் அல்லது 104 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.’’

இவ்வாறு அருண் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x