Last Updated : 10 Jun, 2021 11:28 AM

 

Published : 10 Jun 2021 11:28 AM
Last Updated : 10 Jun 2021 11:28 AM

புதுச்சேரி ஆளுநரின் ஆலோசகர்களுக்கு 2 மாதச் செலவு ரூ.24 லட்சம்: ஆர்டிஐயில் தகவல்

புதுச்சேரி பொறுப்பு ஆளுநர் தமிழிசையின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் இருவருக்கும் இரண்டு மாதத்தில் ஊதியம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கியதற்கு ரூ.24.05 லட்சம் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது.

புதுச்சேரி ஆளுநராக இருந்த கிரண்பேடி மாற்றப்பட்டு கடந்த பிப்ரவரி 18-ம் தேதி புதிய துணைநிலை ஆளுநராகத் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்றார். அதையடுத்து காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. ஆளுநரின் ஆலோசகர்களாக பிப்ரவரி 26-ம் தேதி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் சந்திரமவுலி, மகேஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அதையடுத்து சட்டப்பேரவையில் முதல்வரின் செயலர் இருந்த அறை, அருகிலுள்ள மற்றொரு அறை ஆகியவை ஆளுநரின் இரு ஆலோசகர்களுக்கு மார்ச் 1-ம் தேதி ஒதுக்கப்பட்டன.

மிகச் சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஏற்கெனவே 20-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ள சூழலில், ஆளுநர் மாளிகையில் ஆளுநருக்கு தனி அரசுச் செயலர் மற்றும் ஏராளமான அரசு அலுவலர்கள் இருக்கும் சூழலில் ஆளுநரின் ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடைந்து, முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றவுடன் ஆளுநரின் ஆலோசகர்கள் பதவிக் காலம் முடிவடைந்தது. சுமார் இரு மாதங்கள் மட்டுமே அவர்கள் பணியில் இருந்தனர். அத்துடன் சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த ஆலோசகர்களின் அறைகள் காலி செய்யப்பட்டன.

ஏற்கெனவே அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்குப் பல மாதங்களாக ஊதியம் அளிக்காத நிலையில், இரு மாதங்கள் மட்டுமே பணியில் இருந்த ஆளுநரின் ஆலோசகர்களுக்கு ஊதியம், உதவியாளர், வாகனங்கள், இல்லம் என அரசு நிதி செலவிடப்பட்டது.

இதுபற்றித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி கூறும்போது, "ஆளுநர்களுக்கு ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மாத ஊதியமாக மொத்தம் ரூ.2.8 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவியாளர்களாக வேறு அரசுத் துறையில் இருந்த நான்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் ஆளுநர் ஆலோசகர்கள் தங்க, அரசு இல்லம் ரூ.14.65 லட்சத்தில் செலவு செய்து சரிசெய்து தரப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த இல்லத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.12 லட்சம் செலவில் சீரமைத்திருந்தனர். தற்போது ரூ.5 லட்சம் செலவிட்டு சீரமைத்துள்ளதுடன் வீட்டு உபயோகப் பொருட்களாகக் கட்டில், மெத்தை, சோபா, சேர் என ரூ.9.65 லட்சத்துக்கு வாங்கப்பட்டு, அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பு ஆளுநரின் ஆலோசகர்களுக்கு இரண்டு மாதத்தில் ஊதியம், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கிய செலவு உள்பட அனைத்துக்கும் ரூ.24.05 லட்சம் செலவிடப்பட்டுள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரியவந்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

புதிய அரசில் முதல்வர் பொறுப்பு ஏற்றவுடன், சட்டப்பேரவையில் இருந்த ஆலோசகர்களின் அறைகள் மே மாதத்தின் தொடக்கத்தில் காலி செய்யப்பட்டன. அத்துடன் அண்மையில்தான் ஆலோசகர்கள் தங்கியிருந்த வீடுகளில் இருந்து அவர்கள் காலி செய்து புறப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x