Published : 10 Jun 2021 03:12 AM
Last Updated : 10 Jun 2021 03:12 AM

ஏகாம்பரநாதர் கோயில் ஊழியர்கள், காவல் துறையினரை அவதூறாக பேசியதாக 2 சமூக ஆர்வலர்கள் கைது

ஏகாம்பரநாதர் கோயில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை அவதூறாக பேசியதாக 2 சமூக ஆர்வலர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தினேஷ்பாபு, டில்லிபாபு ஆகியோரை போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது போலீஸாரை அவர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மாதம் 5-ம் தேதி ஏகாம்பரநாதர் கோயில் பொக்கிஷ அறையில் இருந்த நகைகள் காணாமல்போனதாக அவதூறு பரப்பியதாகவும், கோயில் பணியாளர்கள், ஊழியர்களை இவர்கள் இருவரும் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகார் தொடர்பாக சிவகாஞ்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். அந்த வழக்கிலும் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தினேஷ்பாபு, டில்லிபாபு இருவரும் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிய சிலை செய்ததில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக புகார் அளித்தவர்கள். இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் விசாரணை செய்து முக்கிய அதிகாரிகளை கைது செய்தனர்.

தொடர்ச்சியாக இவர்கள் கோயிலில் பிரச்சினைகள் தொடர்பாக புகார் கொடுத்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில் இவர்கள் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருப்பது திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x